Tuesday, February 9, 2010

வாழ்வே கவிதையாய்


தூறுகின்ற மழைத்துளியின் தூய்மைமிக்க தொண்டாலே துயரம் நீங்க

சேறுவற்றி வெடித்தநிலம் செழுமையுற்று நிதிவிளைக்க செய்வ தொப்ப

நாறுகின்ற குட்டைமன நல்லவர்கள் நகைத்தாலும் நலியேன் நெஞ்சில்

ஊறுகின்ற கவித்துளிகள் ஒவ்வொன்றும் தமிழ்வளர்க்கும் உண்மை உண்மை!


பஞ்சமெனும் கொடுநோயின் பல்லிடுக்கில் பட்டுழன்று பசுமை நீங்கி

கொஞ்சுமொழி மனையாளும் குதலைமொழி மைந்தர்கள் குமுறு ஏங்கி

நெஞ்சுதனில் நெருப்பூற்றி நெடும்பயணம் சென்றீறோ எனத்து டித்தால்

அஞ்சாதீர் துணையாக அழகுதமிழ் கவியுண்டென்(று) ஆற்றிச் செல்வேன்

இயற்கைஎழில் மதுவருந்தி இனிக்குமந்த போதையிலே இறும்பூ தெய்தி

மயக்குதமிழ் மங்கைதரும் மதனசுகம் பெறஅவளை மருவி வையம்

நயக்கஇன்று மறுத்தாலும் நானிறந்த பின்பொருநாள் நன்று போற்றி

வியக்கவண்ணம் நறுங்கவிகள் விதவிதமாய் வடித்தவற்றை விட்டுச்செல்வேன்

நீலாவணன், முருகையன் ஆகிய மூவருள் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணனின் வெளிவராத கவிதைகளில் ஒன்று இது.

32 ஆண்டுகளுக்கு முன்னர் மரணித்துப்போன ஒரு கவிஞன், தன் கவிதைமீதும் கவியாற்றல் மீதும் வைத்திருந்த நம்பிக்கை இவ்வாறுதான் கவிதையாக வெளிப்பட்டது. அந்த நம்பிக்கை எத்துணை உறுதியானது என்பதை, இன்றும் அவரது கவிதைகள் சுவைஞர்களால் தேடி வாசிக்கப்படுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. கவிஞர் நீலா வணன் மரணித்து 30 ஆண்டுகளின் பின்னர் வெளிவந்த ‘ஒத்திகை’ எனும் கவிதைத் தொகுதியின் அச்சிட்ட 1000 பிரதிகளும் ஓராண்டு காலத்துள் விற்றுத் தீர்ந்தன என்பது, எனது இக்கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்றே நம்புகிறேன். கவிஞர் நீலாவணனின் மகனாக அந்நூலை வெளியிட்டவன் என்ற வகையில் அவ்வனுபவத்தை நேரடியாகப் பெற்றவன் நான்.

நீலாவணனின் கவிதைகள் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், வாதங்கள், பிரதிவாதங்கள் என, அவ்வப்போது சஞ்சிகைகள், மாசிகைகள், நாளிதழ்கள் என்பவற்றில் வெளிவந்தவண்ணமிருந்தாலும் நீலாவணன் படைப்புகள் இன்னும் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். இதற்கான முழுப்பொறுப்பையும் நானும் எனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவேண்டியுள்ளோம். அவரது படைப்புகள் அனைத்தும் ஒருசேர இன்னமும் வாசகனைச் சென்றடையவில்லை. அவற்றை முழுமையானதொரு தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை நாம் இன்னும் செய்யவில்லை. இந்தக்குறை நிவர்த்தி செய்யப்படும் வரை நீலாவணனின் படைப்புகள் தொடர்பான முழுமையானதொரு தரிசனம் எவருக்குமே கிடைக்காது போய்விடும்.

நீலாவணன் கவிதைகளைச் சுவைப்பவர்கள் அவற்றை ஏனைய கவிஞர்களின் கவிதையோடு ஒப்பு நோக்குவதும், சில காரணிகளை முன் வைத்து ஒருவரது கவிதைகளைவிட மற்றவருடைய கவிதை உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்றோ அல்லது அத்தகைய ஒப்புநோக்குதலின் முடிவாக யாரேனும் ஒருவரே கவிதையின் சிகரம் என்றோ நிறுவ முன்வரும் அபத்தங்களையும் அண்மைக்காலங்களில் காணமுடிந்தது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவனது வாழ்க்கை முறை, சமூகப்பின்னணி, வாழும் பிரதேசம், சூழல், சூழ்நிலை, பொருளாதாரப் பின்னணி என்பவை அவனது படைப்புகளில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பதை இத்தகைய விமர்சகர்கள் மறந்துவிடுவது விசனத்துக்குரியதே. நீலாவணன் படைப்புகளைச் சுவைப்பதற்கு முன்னர், நீலாவணனின் இத்தகைய சமூக மற்றும் குடும்பப் பின்னணி பற்றித் தெரிந்திருத்தல் அவசியமென நான் நம்புகிறேன்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவில் அமைந்துள்ள பெரிய நீலாவணை என்னும் சிற்றூரே நீலாவணன் பிறந்து, வளர்ந்து, மரணித்த ஊர். ஊர்மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். நீலாவணனின் தந்தையார் சித்த ஆயுள்வேத வைத்தியர். நீலாவணனின் தாய்; வழிப்பாட்டனார் சேவகனாராகவும் (பிஸ்கால்), சட்டம்பியராகவும் தொழில் பார்த்தவர். அவருக்கு சோதிடம், மருத்துவம், மந்திரம் என கைவந்த கலைகள் பல. அதனால் நீலாவணனின் தாயாருக்கும் இலக்கியம் தொடர்பான பரிச்சயமிருந்தது. 3 தம்பிமாரையும், 3 தங்கையரையும் கொண்ட நடுத்தரக் குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை, நீலாவணன். பயிற்றப்பட்ட ஆசிரியராக பணியாற்றியவர். இளமைக் காலத்தில் திராவிட இயக்கத்தின் தீவிர பக்தனாக இருந்து பின்னர் தமிழரசுக்கட்சி அபிமானியாக மாறியவர். சாதிக்கொடுமைகளை, தீண்டாமையை, சமூக அநீதிகளை, மூடநம்பிக்கைகளை, எதிர்;த்துக்; குரல்கொடுத்ததோடு, இவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை இயக்க ரீதியாக மேற்கொண்டிருந்தவர். இளமைக்காலத்தில் நாத்தீகப் போக்குடையவராக இருந்தாலும் பிற்காலத்தில் இறை நம்பிக்கை கொண்டவராக மாறியவர். உணவுப்பிரியர். நண்பர்களிடத்தில் அலாதி அன்புகொண்டவர். இலகுவில்; உணர்ச்சிவசப்படுபவர். ஏழைகளிடத்தில் இரக்கமுள்ளவர். காதல் திருமணம் செய்து, 5 பிள்ளைகளின் தந்தையாக, 42 வயதில் மாரடைப்பால் மரணமானவர். இத்தகைய பதிவுகளோடு நீலாவணனின் படைப்புகளைத் தரிசிக்கும்போது அவற்றின் காத்திரத் தன்மையை உணர்ந்துகொள்ளமுடியும்

அனுபவமும் பங்குபற்றலுமே ஒரு படைப்பின் அடிநாதம்; என்பார்கள். நீலாவணன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை கவிதைகளாக வடித்து விட்டுச் சென்றிருக்கின்றார். அவை பிரசுரிக்க வேண்டியவையா? பிரசுரத்திற்குத் தகுதியானவையா? இல்லையா என்பதை அவர் எங்கும் குறிப்பிட்டுச் செல்லவில்லை. தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை, தான் சந்தித்த நிகழ்வுகளை, மன உளைச்சல்களை கவிதைகளாக வடித்துள்ளார். வெறுமனே கவிஞன் என்ற பெயருக்காக வாழ்ந்துவிட்டுச் செல்லாமல் கவிஞனாகவே கவிதையுடன் அவர் வாழ்ந்து மறைந்துள்ளார். இதுவரை வெளி உலகத்துக்குத் தெரியவராத அத்தகைய கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நீலாவணன் தமது பிள்ளைகளான எம்மைப்பற்றி அவ்வப்போது எழுதிய கவிதைகள் சில.

என்னை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய விடுதியில் சேர்த்துவிட்டு, வீPடுசென்ற அன்றிரவு அவர் எழுதிய கவிதை இது. அவரின் மரணத்தின் பின்பே இக்கவிதையை நான் கண்டேன்.

விடுதியில் வேந்தன்..

காந்தம் இழுத்திடும் என்பார்கள் பெற்றோர் தம் பிள்ளையின்மேல்

பாந்தம் இருக்குமென் பேன்நான் கவிஞன்! அறிஞரவர்!

வேந்தன் உனை நான் விடுதியில் விட்டு நம் வீடுவரச்

சாய்ந்து பொழுது மலையுள் சரிந்து சயனித்தது.

வீட்டில் விளக்கு இலை. இருள்! ஏதோ விழுங்கியவள்

ஆட்டம் இருந்தாள் உன் அம்மா. முதுசொமாம் ஆதனத்தைக்

கோட்டை கொடுத்தவள் போல் கூரை மேட்டைக் குறிப்புவைத்து

தேட்டம் நடத்துகின் றாளோ! தெரியேன!; திருகிவிட்டேன்

பாட்டுக்கெழுந்து நடந்து விளக்கினைப் பற்றவைத்தாள்

கேட்டாள் உன் சங்கதி யாவும் குடைந்தவை கூறுகையில்

பாட்டுச் சுரந்தவள் கண்களில் பாய்ந்து பரவும். அதைக்

காட்டாமல் மெல்ல நடந்து தன் காரியம் கைப்பிடித்தாள்.

வீணையின் தந்திகள் கால்பட்டு விண்ணென் றறுந்திடவும்

வீணை அழுத குரல்கள் என் காதில் விழுந்தன@ போய்

பானை அடுக்கை உருட்டி விழியை முந்தானையினால்

நானறியாது துடைத்தனள் உன் வீரத் தாய்! நகையே

என்தம்பி வினோதன் வாய்பேச முடியாதவன். ஒருநாள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவனின் பந்து களவு போன விதத்தை அவர் இவ்வாறு கவிதையில் வடித்திருக்கிறார்.

தாய்

பேசத் தெரியாத, என் பிள்ளை, நெடுநாளாய்

ஆசையோடு வைத்துவிளை யாடும் அழகான

பந்தோ டிருந்தான் படலைக்குள், யாரோ பெண்

குந்தியிருந்தாள் குழந்தை அருகினிலே,

ஆஸ்பத் திரியிருந்து வந்திருந்தாள் அம்மாது

பேசத் தெரியாத பிள்ளையெனக் கண்டறிந்தாள்

ஆசையொடு தன்கழுத்தைக் கட்டி ‘அம்மா பந்து’ என்று

பேசும்பொற் சித்திரத்தைப் பெற்றமனம் எண்ணியது

பந்தொன்று வாங்கப் பணமில்லை ஆதலினால்

சந்தர்ப்பம் தன்னைச் சரியாய்ப் பயன்படுத்திக்

கொண்டாள், அவளுடைய கொங்கைகள் மூன்றாயின!

கண்ட ஒருவர் கதைசொல்லும் முன்பே அத்

தாய்மை நடந்து தலைமறைந்து போயிற்று!

வாய்பேசா என்மைந்தன், தாயோ டிவைசொன்னான்

கண்களில் நீர் சோரக் கை காட்டி அழுகின்றான்

கண்துடைத்தேன், பிள்ளைக்கு.

‘கள்ளி’ என்றாள் என்துனைவி

என் தங்கை படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரியில்லை என்பது அவளது ஆசிரியையின் கருத்து. ஆனால் அவள் கெட்டிக்காரிதான். ஏதோ இப்போது கொஞ்சம் படிப்பில் கவனம் குறைவு என்கிறார். அவள் புத்திசாலி என்பதை அவர் நிறுவும் விதம் இதுதான்.

விவேகி

துக்கமும் துயரும் பொங்கும்

துவிகுரல் சினிமாப் பாட்டு

பக்கத்து வீட்டுப் பையன்

பலமாகப் பாடல் கேட்டேன்

பக்கத்தில் இருந்து பாடம்

படித்தவள் நளினி வாவா

பக்கென நூலை மூடிப்

பார்த்தனள் சுற்றும் முற்றும்

பாட்டிலே சொக்கிப் போய் தன்

படிப்பையும் துறந்தாள் என்று

காட்டினர் வீட்டிலுள்ளோர்!

கணத்திலே, துடைப்பம் தூக்கி

மூட்டைபோல், கிடந்த நாயின்

முதுகிலே போட்டாள் ஒன்று!

வீட்டினைச் சுற்றி நாயும்

வீல் என்று கத்த மீண்டாள்!

ஆதலால்.. நளினி பற்றி

அழகம்மா ரீச்சர், நீங்கள்

வேதனைப் படுதல் வேண்டாம்!

விவேகிஎன் நளினி, ஏதோ

சாதனைக் குறைவு: நாளை

சரிப்பட்டு விடுவாள்.. ஆண்டுச்

சோதனைக் கெல்லாம் நன்றாய்

விடை செய்வாள்! கவலை வேண்டாம்!

என் கடைசித் தங்கை கோசலாவின் கையில் அவளது பொம்மை படும்பாட்டை பாட்டாய் அவர்வடித்த பாங்கு இது.

விதியும் நானும்

நீல மணிக்கண்கள் நீண்ட கரியமுடி

கோல நிலா கட்டிக் கொஞ்ச துடிக்கும் நகை

இளமை ஒழுகும் எழிலோ வியமாய்

அழகாய் கலைஞன் அமைத்தெடுத்தான் ஓர் பாவை!

எம் வீட் டிள வரசி கோசலை என்பவள்

என்னென்ன பாடு இதனைப் படுத்துகிறாள்

தண்ணிரில் போட்டு வைப்பாள் தலையூறி விட்டதென்று

துண்டு கொண்டு வந்து துடைத்தாள் பவுடர்

கொண்டு வந்து மேனியெங்கும் கொட்டித் தடவிவிட்டு

பாவாடை சட்டை முத்து மாலை றிபன் கட்டி

பாவை தன் மார்பினிலே பாலூட்டித் தாலாட்டும் பாடுகிறாள்.

காலில் தலையணையைப் போட்டு வளர்த்தி

தூங்க வைத்து விட்டு துணி கழுவப் போகிறாள்

தேங்காய் துருவினாள் காய்கறிகள் வெட்டி

கறிகளோடு சோறு சமைத்தாள் அவைபின்

பிரியமாய் பிள்ளையினை தூக்கி வைத்து ஊட்டுகிறாள்

தீடீரென்று கோபத்தில் திட்டுகிறாள் பிள்ளையை

படீரென்று நாலுமுதுகில் படைத்துவிட்டு

பள்ளிக்கு போய்படிக்க சொன்னாள் நீ போகாமல்

துள்ளி விளையாடப் பார்க்கிறாள் எண்ணி என்று

பார்க்க பரிதாப மாக இருக்கிறது.

இப்படி பாவை தினமும் பலதடவை

அப்பாவி.. கையில் படும்பாடு கொஞ்சமல்ல

எப்பொழுதும் என்மகள் விளையாடக் கூப்பிட்டால்

தப்பாது பாவையவள் கையில் தடகொடுக்கும்

விதி என்னை விளையாடக் கூப்பிட்ட வேளைகளில்

அதை ஏற்றதன் பின்னே போனதுபோல் பாவையும்

என்மகள் கையில் இருந்து வருகிறது

No comments: