Monday, December 18, 2006

அடுத்த பிறப்பு

நேற்றிரவு, தொலைக்காட்சி
நிகழ்ச்சியொன்றை நான் பார்த்தேன்.

காட்டில் அலைகையிலே
கால்களிலே காயமுற்ற
காட்டு நரியொன்றைக்
கவனமாய் கைப்பற்றி..
காரொன்றில் ஏற்றி
கனதூரம் எடுத்துவந்து,
காலுக்கு மருந்திட்டு,
கட்டிட்டு மீண்டுமதை,
காரேற்றிக் கொண்டுவந்து
காட்டிலதைவிட்டார்கள்.
பத்துப்பேர் மட்டில் இந்தப்
பணியில் உழைத்தார்கள்.

இது எம்மூரிலல்ல.
எங்கோ ஓர் வெளிநாட்டில்!

மற்றோர் அலைவரிசை
மாற்றி அதைப் பார்த்தேன்.

முன்னரங்கப் பகுதியாம்
முகமாலை ஊரதனில்
படை நடத்தி வந்து
பலியான வீரர் உடற்
பாகங்கள் பலவற்றை
பார்த்து, அவற்றையெல்லாம்
கூட்டியள்ளிக்கொண்டு சென்று
கொழுத்தியதாய்ச் சொன்னர்கள்.

பக்கத்தே கிடந்த ஒரு
பத்திரிகையைப் பார்த்தேன்.

நாதியற்று வடிகாலில்
நாணம்மறைக்கவென
ஆடையெதும் இன்றி
அனாதையெனக் கிடந்த
ஆணின் உடல் பற்றி
அறிவித்ததொரு செய்தி.

ஆண்டவனே! மீண்டுமெனக்கு
அடுத்த பிறப்பளித்தால்..
காட்டு நரிப் பிறப்பெடுக்கும்
கருனையினைச் செய்வாயா?

அதுவும் ஒரு வெளிநாட்டில்!

No comments: