Wednesday, December 20, 2006

"வானொலி ஒன்பது" - (குறும்பாக்கள்)

வானொலியை மார்க்கோனி படைத்தார்!
வரும் பலன்கள் பலவென்றே நினைத்தார்!
ஆனபயன் (F.M) எப். எம்மால்,
அகிலத்திற்கில்லையென,
தானறிந்தால், மீண்டுமுயிர் துறப்பார்.

வானொலியைப் போட்டாலே ஆச்சு,
வளவளப்பு 'டெலிபோனில்' பேச்சு.!
போனதந்தப் பொற்காலம்,
புதுமைசெய்த வானொலிக்கு,
ஆன புகழ், பேர், பெருமை போச்சு!

ஊரெங்கும் வானொலியோ கொள்ளை!
உருப்படியாய் ஒன்றேனும் இல்லை!
பாரத சஞ்சிகைத் துணுக்கை,
பாடல்களை ஒலிபரப்பி
நாறடிப்பார்! நமக்கதுவே தொல்லை!

காணுகிற நேரமெலாம் பாட்டு,
கண்ட கண்ட பெயர் சொல்லிப் போட்டு
வானொலியென்றால் எனக்கு
வாந்திவரச் செய்துவிட்டார்
காணுமிந்தக் காதுவலி! பூட்டு.

'அந்தவகை' 'இந்தவகை' இல்லாட்டில்
அவர்பாடோ அந்தரத்துத் தொட்டில்
'எந்தவகை' பேசுவது
என்றிவர்க்குத் தெரியாது
வந்ததையா வானொலி இக்கட்டில்

நல்ல தமிழ் பேசாதே! பத்து,
நரம்பேனும் தெறித்திடவே கத்து!
மெல்ல இது 'ஜோக்' என்று
மெதுவாகச் சொல்! சிரித்து,
எல்லோரின் காதிலும் பூச்சுத்து!

'ல'கரத்தை 'ழ' 'ள' வென்றாக்கு!
'ன'கரத்தை 'ண' வென்றும் ஆக்கு!
சிகரத்தை எட்டியதாய்
சிலம்பாட்டம் ஆடும் உனை,
இகழ்வார்கள். போய் வழி உன் நாக்கு!

அறிவிப்பு செய்வதற்குத் தகுதி
ஆட்களுக்குத் தேவையில்லை மிகுதி
முறையற்றுப் பேசுதற்கும்
முக்கி முக்கிக் கத்துதற்கும்
தெரியுமென்றால்.. போய்ச் சேர் அப்பகுதி

( இனி, வீரகேசரி வாரமஞ்சரியில் வெளிவந்த ஒரு குறும்பா சில மாற்றங்களுடன்)

பாட்டுகளை மாற்றி இவர் தந்தார்
பகிடிவிட்டுத் தான் சிரித்து நொந்தார்!
சேட்டை விட்டார் டெலிபோனில்!
செய்கருமந்தனில் மட்டும்
கோட்டை விட்டார்! தமிழ்த் தாயோ நொந்தாள்!

1 comment:

கானா பிரபா said...

என்ன கனகாலம் பதிவில்லை? தமிழ்மணத்திலும் இணைக்கலாமே?